நான் ராஜினாமா செய்ய மாட்டேன்
காண்டிராக்டர் தற்கொலை வழக்கில் நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்
பெங்களூரு:
எதுவும் எனக்கு தெரியாது
காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் உடுப்பியில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு மந்திரி ஈசுவரப்பாவே காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சந்தோஷ் பட்டீல் என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அந்த நபர் முன்பு எனக்கு எதிராக லஞ்ச புகார் கூறினார். இதற்காக அவர் மீது கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். இதில் அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் கோர்ட்டு நோட்டீசுக்கு பயந்து கூட இந்த முடிவை எடுத்திருக்கலாம். இதை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது.
தவறு செய்யவில்லை
அதனால் நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. நான் தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளேன்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ் பட்டீல், மந்திரி ஈசுவரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்டது. அந்த கடிதத்திற்கு மாநில அரசின் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் விளக்கம் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story