131-வது பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கலெக்டர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு


131-வது பிறந்தநாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கலெக்டர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 14 April 2022 4:29 PM GMT (Updated: 14 April 2022 4:29 PM GMT)

தேனி மாவட்டத்தில் அம்பேத்கர் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலை, உருவப்படத்துக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தேனி:

சமத்துவ நாள் உறுதிமொழி
தேனி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் உருவப்படத்துக்கு கலெக்டர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கலெக்டர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சிலைக்கு மாலை
தேனி அருகே அரண்மனைப்புதூரில் உள்ள அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன், தேசிய செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் அரசுபாண்டி, ஒன்றிய செயலாளர்கள் குணசேரகன், சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜதுரை, மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பெரியகுளம்
பெரியகுளத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் சரவணகுமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் எல்.எம் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து தலைமை தாங்கி மாலை அணிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நகர செயலாளர் ஜோதி முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் ரபீக் ஆகியோர் மாலை அணிவித்தனர். அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மாலை அணிவித்தார். அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சிவா தலைமையிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் மோகன்ராஜ் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.
இதுபோல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Next Story