இந்தியாவில் தொழில் தொடங்க உள்ள தான்சானியா நாட்டு முதலீட்டாளர் குழுவினருடன் தூதர் மாமல்லபுரம் வருகை


இந்தியாவில் தொழில் தொடங்க உள்ள தான்சானியா நாட்டு முதலீட்டாளர் குழுவினருடன் தூதர் மாமல்லபுரம் வருகை
x
தினத்தந்தி 15 April 2022 9:32 AM GMT (Updated: 15 April 2022 9:32 AM GMT)

இந்தியாவில் தொழில் தொடங்க உள்ள தான்சானியா நாட்டு முதலீட்டாளர் குழுவினருடன் இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் மாமல்லபுரம் வருகை தந்தார். அவர்கள் பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.

மாமல்லபுரம்,

இந்தியாவில் தொழில் தொடங்க உள்ள தான்சானியா நாட்டு தொழில் முதலீட்டாளர்கள் குழுவினருடன் இந்தியாவுக்கான தான்சானியா நாட்டு தூதர் ஹனிசாகபுகி எம்பேகா சென்னை வந்துள்ளனர். இவர்கள் நேற்று மாமல்லபுரத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுலா வந்தனர்.

முன்னதாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதிக்கு வந்த தான்சானியா நாட்டு தூதர் மற்றும் இந்தியாவில் தொழில் தொடங்க உள்ள அந்நாட்டு முதலீட்டாளர் குழுவினரை சுற்றுலாத்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டு ரசித்தனர். கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார். பிறகு அங்கு முகப்பு வாயிலில் உள்ள நந்தி சிலைகளையும் அவர்கள் பார்வையிட்டனர். பிறகு கடற்கரை கோவில் வளாகத்தின் முன் பகுதியில் உள்ள மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்காக சான்றான படகு துறை, அகழி பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். அப்போது உடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கடற்கரை கோவில் உருவாக்கப்பட்டதன் பின்னணி, கடல் ஓரத்தில் பல 100 ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோவில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினார்.

அவரிடம் தான்சானியா நாட்டு தூதர் கடற்கரை கோவிலின் அரிய தகவல்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். முடிவில் கடற்கரை கோவிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பார்த்த அந்நாட்டு தூதர் மற்றும் முதலீட்டாளர் குழுவினர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தான்சானியா நாட்டு பெண் தூதருடன் இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழக ஆலோசனை குழு உறுப்பினர் சிரினிக் ஷகர், இந்திய தொழில் முதலீட்டாளர் குழு உறுப்பினர்கள் ஜி.ரங்கசாமி, டாக்டர் இந்திராகாந்தி ஆகியோர் வந்திருந்தனர். தான்சானியா நாட்டு தூதர் மற்றும் தொழில் முதலீட்டாளர் குழுவினரின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story