சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் நகை பறித்த ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது-நகை, கார் பறிமுதல்


சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் நகை பறித்த ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் கைது-நகை, கார் பறிமுதல்
x
தினத்தந்தி 17 April 2022 10:18 PM GMT (Updated: 17 April 2022 10:18 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் நகைகளை பறித்து சென்ற ஈரானிய கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் பெண்களிடம் நகைகளை பறித்து சென்ற ஈரானிய கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தங்க சங்கிலி பறிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்லும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நகைகள் பறிக்கும் போது பல பெண்கள் சாலையில் விழுந்து தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடும் நிலையும் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் சேலம் மூங்கில்பாடி பகுதியை சேர்ந்த பத்மாவதி (வயது 73) என்பவர் கடந்த மாதம் 10-ந்தேதி அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பத்மாவதிக்கு பின் தலையில் பலத்த அடிபட்டது.
தனிப்படை போலீசார்
இது குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அடிக்கடி பெண்களிடம் நகைகள் பறித்து செல்லும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார். 
இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில், உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டுக்கள் வினோத், தங்கதுரை, மகேந்திரபூபதி, பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர். 
இந்த நிலையில் ஓமலூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேர் திடீரென்று சாலையோரம் காரை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்து செல்வதும், பின்னர் அவர்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை திருடி அதில் செல்வதும் தெரியவந்தது.
துரத்தி சென்றனர்
இதையடுத்து அவர்களை போலீசார் துரத்தி சென்றனர். ஆனால் அவர்கள் சிறிது தூரம் சென்றதும், மீண்டும் அந்த பகுதியில் இருந்த ஒரு காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். பின்னர் அவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தப்பிச்சென்ற 2 பேரும் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் ஜார்ஜினசோலி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இந்த தகவலின் ேபரில் தனிப்படை போலீசார் கர்நாடகாவுக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ஆசிக்அலி மகன் முகமது ஆசிப் அலி (வயது 23), அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஜப்பார் மகன் ஷபிசேக் (30) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 
அவர்கள் 2 பேரும் பத்மாவதி உள்ளிட்ட பல பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 6 பவுன் தங்க நகை, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கொள்ளையர்கள் 2 பேரையும் போலீசார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரானிய கொள்ளையர்கள்
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்து இருப்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது கைது செய்யப்பட்ட 2 கொள்ளையர்களின் பரம்பரையினர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் வசித்து வந்தனர். அவர்களது வாரிசுகள் கொள்ளையர்களாக மாறி தமிழ்நாட்டில் கொள்ளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
அகதிகளாக வந்த ஈரானியர்களின் வாரிசுகள் பலர் கொள்ளையடிப்பதையே தொழிலாக வைத்து உள்ளனர். இதனால் இவர்களை ஈரானிய கொள்ளையர்கள் என்று போலீசார் குறிப்பிடுகின்றனர்.
தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதற்கு மூளையாக சல்மான்கான், அப்பாசி, சபீர் ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்கள் மும்பையில் தங்கி இருப்பது தெரியவந்தது. இவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Next Story