ஓட்டலில் புதுக்கோட்டை சிறுமியை தவறவிட்ட பெற்றோர்


ஓட்டலில் புதுக்கோட்டை சிறுமியை தவறவிட்ட பெற்றோர்
x
தினத்தந்தி 17 April 2022 10:21 PM GMT (Updated: 17 April 2022 10:21 PM GMT)

ஓட்டலில் புதுக்கோட்டை சிறுமியை பெற்றோர் தவறவிட்டனர்.

மலைக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கொன்னக்காடு கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். நேற்று கோவிலுக்கு வந்த அவர்கள், பின்னர் தங்கள் ஊருக்கு திரும்பிச்செல்ல, 2 வேன்கள் வரவழைத்துள்ளனர். அந்த வேன்களில் ஏறி ஊருக்கு செல்லும் வழியில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு இறங்கியுள்ளனர்.
அப்போது வேனில் இருந்து பழனியப்பன்-கவுசல்யா தம்பதியின் மகள் தன்ஷிகா(வயது 3) இறங்கி ஓட்டல் வளாகத்தில் இருந்த விளையாட்டு பூங்காவிற்கு சென்றுள்ளார். இதை யாரும் கவனிக்காத நிலையில், அனைவரும் வேன்களில் ஏறி தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் சிறுமி தனியாக இருந்ததை பார்த்த ஓட்டல் பணியாளர்கள், ேகாட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு சென்று, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். இதையடுத்து அதில் பதிவாகியிருந்த வேனின் பதிவெண்ணை கொண்டு அதன் உரிமையாளரின் முகவரியை பெற்றதோடு, அந்த வேன் செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், கீரனூர் சுங்கச்சாவடி அருகே சென்ற வேன்களை, அங்கிருந்த போலீசார் நிறுத்தி தகவல் தெரிவித்தனர். அப்போது சிறுமியின் பெற்றோர் தங்கள் வேனுக்கு பின்னால் வரும் மற்றொரு வேனில் தங்கள் குழந்தை வருவதாக நினைத்துக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் உடனடியாக அந்த ஓட்டலுக்கு வந்தனர். அவர்களிடம் சிறுமியை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

Next Story