கடலூர் கரையேறவிட்டகுப்பத்தில் கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி திரளான பக்தர்கள் தரிசனம்


கடலூர் கரையேறவிட்டகுப்பத்தில் கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 19 April 2022 4:22 PM GMT (Updated: 19 April 2022 4:24 PM GMT)

கடலூர் கரையேறவிட்டகுப்பத்தில் கல்லை தெப்பமாக்கி அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்



கடலூர்

தெப்பமான கல்

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், சமண சமயவாதிகளின் தூண்டுதலால் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில் வீசி எறிந்தார். அப்போது அப்பர் ‘சொற்றுணை வேதியன் சோதிவானவன்’ என தொடங்கும் நமச்சிவாய பதிகம் பாடினார். இதன் மூலம், அந்த கல் தெப்பமாக மாறியதை அடுத்து அப்பர் கரை சேர்ந்தார்.
இதன் பின்னர் அவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளை வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. அப்பர் கரையேறிய இடம் தான், தற்போது கரையேறவிட்டகுப்பம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இது கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வண்டிப்பாளையம் அருகில் உள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு

அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு அப்பர் கரையேறும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிகழ்ச்சி நடைபெறவில்லை.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சியை நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணியளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகி உடன் பாடலீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு, தேரடி தெரு, வண்டிப்பாளையம் மெயின்ரோடு வழியாக கரையேறவிட்டகுப்பத்தில் வந்தடைந்தார்.

ஐதீக நிகழ்ச்சி

தொடர்ந்து காலை 8 மணியளவில் பாடலீஸ்வரருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள குளத்தில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெப்பத்தில் அப்பர் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறி அங்குள்ள மண்டபத்தில் தீபாராதனை நடந்தது. இதையடுத்து புதுவண்டிப்பாளையம் வீதி, அப்பர் சாலை, பழைய வண்டிப்பாளையம் கற்பக விநாயகர் கோவில் வீதி வழியாக சென்று மாலை 6 மணியளவில் வாகீசர் மண்டகப்படியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதன் பிறகு இரவு 9 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை நடந்ததும், தேவார திருமுறை இன்னிசை பாராயணத்துடன் அப்பா் பெருமான், விநாயகா், பாடலீஸ்வரர், புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமியுடன் திருப்பாதிரிப்புலியூர் கோவிலை சென்றடைந்தனர். விழாவில் கடலூர் வண்டிப்பாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story