மாநகராட்சி லாரி-ஸ்கூட்டர் மோதல்; வங்கி பெண் அதிகாரி பலி


மாநகராட்சி லாரி-ஸ்கூட்டர் மோதல்;  வங்கி பெண் அதிகாரி பலி
x
தினத்தந்தி 19 April 2022 4:30 PM GMT (Updated: 19 April 2022 4:30 PM GMT)

மாநகராட்சி லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற வங்கி பெண் அதிகாரி இறந்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது

பெங்களூரு: மாநகராட்சி லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற வங்கி பெண் அதிகாரி இறந்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.

வங்கி பெண் அதிகாரி சாவு

பெங்களூரு ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் பத்மினி(வயது 40). இவர் செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் இருந்து ஆர்.ஆர்.நகருக்கு பத்மினி தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். மைசூரு ரோடு நாயண்டஹள்ளி ஜங்ஷன் பகுதியில் பத்மினி சென்ற போது அந்த வழியாக வந்த மாநகராட்சி குப்பை லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பத்மினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து அறிந்ததும் பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே மாதத்தில் 3-வது சம்பவம்

மேலும் சம்பவம் குறித்து பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் சிவராஜை கைது செய்தனர். பெங்களூருவில் கடந்த ஒரு மாதத்தில் மாநகராட்சி குப்பை லாரி மோதி பத்மினி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

அதாவது கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி ஹெப்பாலில் மாநகராட்சி குப்பை லாரி மோதி அக்சயா என்ற 9-ம் வகுப்பு பள்ளி மாணவியும், கடந்த 1-ந் தேதி ராமய்யா என்ற 60 வயது விவசாயியும் இறந்தனர். தற்போது பத்மினி இறந்து உள்ளார். மாநகராட்சி குப்பை லாரியை டிரைவர்கள் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டுவதே விபத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது.

Next Story