சிறப்பு கிராம சபை கூட்டம்


சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 4:16 PM GMT (Updated: 24 April 2022 4:16 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அகணி  ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தமிழ்வேணி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் வீரமணி வரவேற்று பேசினார். கூட்டத்தில் வேளாண்துறை சார்பில் தமிழகஅரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 
பின்னர், நீடித்த வளர்ச்சி இலக்கை அடையும் வகையில் வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான வாழ்வு, குழந்தை நேயம், குடிநீர் வசதி, சமூக பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம், அடிப்படை வசதிகள், பசுமையும், தூய்மையும் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊராட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம் என்று ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு கிஷான் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிம்மேலி-திட்டை ஊராட்சி
 இதேபோல் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் வசந்தி கிருபாநிதி தலைமை தாங்கினார். துனைத்தலைவர் வனிதா துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ஆரோக்கியமேரி வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவாக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுப்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வரப்பட்ட புகார்களை உடனுக்குடன் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமையிலும், செம்மங்குடி ஊராட்சியில் தலைவர் அசோகன் தலைமையிலும், எடக்குடி வடபாதி ஊராட்சியில் தலைவர் அஞ்சம்மாள் தலைமையிலும், தில்லைவிடங்கன் ஊராட்சியில் தலைவர் சுப்ரவேலு தலைமையிலும், வள்ளுவக்குடி ஊராட்சியில் தலைவர் பத்மா தலைமையிலும், விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் தலைவர் ரமணிராஜ் தலைமையிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.
 இதேபோல, சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.
திருவெண்காடு
 சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநகரி, திருவெண்காடு, பூம்புகார், வானகிரி, பெருந்தோட்டம் உள்ளிட்ட 37 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. திருநகரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.  மாவட்ட கவுன்சிலர் விஜய் எஸ்வரன், ஒன்றியக்கவுன்சிலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ஒன்றிய ஆணையர் இளங்கோவன், சீர்காழி நகரசபை துணைத்தலைவர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.
திருக்கடையூர்
இதேபோல, திருக்கடையூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதில், ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சம்பத்குமார் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர். மேலும், பிள்ளைபெருமாள்நல்லூரில் ஊராட்சிமன்ற தலைவர் தீபா முனுசாமி தலைமையிலும், டி.மணல்மேட்டில் ஊராட்சி மன்றத் தலைவர் திலகவதி துரைராஜன் தலைமையிலும், கிள்ளியூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.
 ஆக்கூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிமன்ற துணை தலைவர் சிங்காரவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். காலமநல்லூரில் ஊராட்சிமன்றத்தலைவர் நடராஜன் தலைமையிலும், கிடங்கல் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் அமுதா அன்பழகன் தலைமையிலும், மாமாகுடி ஊராட்சியில் ஊராட்சிமன்றத்தலைவர் விஜயா கோபிநாத் தலைமையிலும், மடப்புரம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் மெஹ்ராஜின்னிசா செல்வநாயகம் தலைமையிலும், மருதம்பள்ளம் ஊராட்சியில் ஊராட்சிமன்றத்தலைவர் சுமதி மதியழகன் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Next Story