பிரபல நடிகர் வீட்டில் கல்வீச்சு; 2 பேர் கைது


பிரபல நடிகர் வீட்டில் கல்வீச்சு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 April 2022 8:59 AM GMT (Updated: 27 April 2022 8:59 AM GMT)

சென்னை அருகே பிரபல நடிகர் வீட்டில் கல்வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த பனையூர் சீ கிளிப் அவென்யூ 5-வது தெருவில் வசிப்பவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. இவர் நடிகரும், இசையமைப்பாளரும் ஆவார். இந்த நிலையில், நேற்று காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டில் கல் வீசி விட்டு சென்றனர். இதில் ஜன்னல், கண்ணாடி உடைந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லை.

இதை பார்த்த எதிர் வீட்டை சேர்ந்தவர்கள் கானத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது காரின் பதிவு நம்பரை வைத்து விசாரித்த போது, காரின் உரிமையாளர் நீலாங்கரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கார் உரிமையாளரிடம் விசாரித்த போது காரை டிரைவர் எடுத்து சென்றது தெரியவந்தது. காரின் டிரைவரான வடபழனியை சேர்ந்த பிரேம்குமார் (24), அவரது நண்பர் அர்ஜீன் (25) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 2 பேரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 2 பேரையும் கைது செய்த போலீசார் எதற்காக நடிகர் வீட்டில் கல் வீசினார்கள்? என அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story