பூண்டி ஏரியை வந்தடையும் கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பு


பூண்டி ஏரியை வந்தடையும் கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 May 2022 10:18 AM GMT (Updated: 12 May 2022 10:18 AM GMT)

பூண்டி ஏரியை வந்தடையும் கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஊத்துக்கோட்டை,  

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. கோடை வெயில் காரணமாக இந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

அதனை ஏற்று கடந்த 5-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தண்ணீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து கடந்த 8-ந்தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.

அன்று இரவே பூண்டி ஏரியை சென்றடைந்தது. தொடக்கத்தில் தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வந்தது. இது படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை வினாடிக்கு 533 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27.84 அடியாக பதிவானது. 1.290 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் பேபி கால்வாயில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Next Story