காடு அனுமந்தராயசாமி கோவில் தேரோட்டம்


காடு அனுமந்தராயசாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 4:28 PM GMT (Updated: 15 May 2022 4:28 PM GMT)

காடு அனுமந்தராயசாமி கோவில் தேரோட்டம்

தாராபுரம்:
தாராபுரம் காடு அனுமந்தராய சாமி கோவில் தேரோட்டத்தின் போது அமைச்சர்கள் கயல்விழி, சக்கரபாணி ஆகியோர் பக்தர்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
கோவிலின் சிறப்பு
 தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராய சாமி கோவில் பகுதி கடந்த. 500 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்தது. அப்போது தாராபுரத்தில் ீவியாசராயர் சாமிகள் இந்தியா முழுவதும் 732 ஆஞ்ச நேயமூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார். இதில் 89-வது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர்.
பொதுவாக சீதா, ராமர் கோவில்களில் மூலமூர்த்தியாக சீதா, ராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஆஞ்சநேயர்  இருப்பது வழக்கம். ஆனால் தாராபுரத்தில் 7 அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா, ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலின் தனி சிறப்பாகும்.
ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேற்கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே கோவில் இருப்பது இங்கு மட்டுமே.இக்கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயப்பெருமானை உள்ளம் உருக வேண்டிக்கொண்டால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு  விரைவில் திருமணமாகும். தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் அது குணமாகும் என்பதும் தனிச்சிறப்பு.
தேரோட்டம் 
இந்த  கோவில் தேரோட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கோவிலுக்கு வந்து காடு அனுமந்தராயரை தரிசனம் செய்தனர். பிறகு காலை 9 மணிக்கு தேர் கோவில் முன்பு நிறுத்தி உலா வர தயார் நிலையில் இருந்தது. 
அதனை அமைச்சர்கள், பக்தர்கள்  புடைசூழ  பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து நகர்த்தினர். பிறகு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோவில் வீதியில் பகல் 12 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. 
தேரோட்டத்தின் போது முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், நகராட்சி தலைவர் கே.பாப்பு கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபால், காளிமுத்து, சரஸ்வதி, மற்றும் திருப்பூர் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் டி.எஸ்.சிவக்குமார், நகராட்சி கவுன்சிலர் சீலாதேவி மாதவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Next Story