உ.பி. சட்டசபை தேர்தல்: விவசாய கடன் தள்ளுபடி என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு


உ.பி. சட்டசபை தேர்தல்: விவசாய கடன் தள்ளுபடி என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 9 Feb 2022 10:18 AM GMT (Updated: 9 Feb 2022 10:36 AM GMT)

சத்தீஸ்கரை போன்று எங்கள் அரசு அமைந்தவுடன் உத்தரபிரதேசத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் பிரியங்கா காந்தி கூறினார்.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக  சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம் என்பதால், உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா? என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் பலப்பரீட்சையில் இறங்கி உள்ளன.

அங்கு முதல் கட்ட தேர்தல், மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

இந்நிலையில்,காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று கட்சியின் தேர்தல் அறிக்கையை அறிவித்தார், அதில் கட்சி விவசாயிகள், கொரோனா போர்வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு சலுகைகளை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்கள் மீதான பொய் வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.

மேலும் அவர்,"சத்தீஸ்கரை போன்று, எங்கள் அரசு அமைந்தவுடன் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். நெல், கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500க்கும், கரும்பு குவிண்டாலுக்கு ரூ.400க்கும் கொள்முதல் செய்யப்படும். மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் மற்றும் தொற்றுநோய்க் காலத்தின் பாக்கிகள் தள்ளுபடி செய்யப்படும்" என்று பிரியங்கா கூறினார்.

மேலும் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.25000 வழங்கப்படும் என்று பிரியங்கா கூறினார். வேலைவாய்ப்பில், காவல்துறை, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பொதுத்துறையில் உள்ள ரூ.12 லட்சம் பணியிடங்கள் நிரப்பபடும் மேலும், எட்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. 

கோதன் நியாய் யோஜனா, பள்ளி சமையல்காரர்களுக்கு ரூ.5000 சம்பளம், பெண் காவலர்களுக்கு அருகில் பணியிடங்கள், கொரோனா போர்வீரர்களுக்கு ரூ.50 லட்சம் வரை இழப்பீடு, அனுபவம் மற்றும் விதிகளின் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் சிக்ஷா மித்ராக்களை முறைப்படுத்துதல், ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை போன்றவை தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story