'பகத்சிங் கிராமத்தில் பதவியேற்பேன்' - ஆம் ஆத்மி முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான்


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 10 March 2022 10:20 AM GMT (Updated: 10 March 2022 10:20 AM GMT)

தன்னுடைய பதவியேற்பு விழா சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் கிராமத்தில் நடைபெறும் என்று பகவந்த் மான் கூறியுள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.  பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலையுடன் இரண்டாவது இடத்திலும், ஆம் ஆத்மி 91 தொகுதிகளில் முன்னிலையுடன் முதல் இடத்திலும் உள்ளன. 

பஞ்சாப் மாநில முதல்- மந்திரியான சரண்ஜித்சிங் சன்னி, தான் போட்டியிட்ட சப்காப் சாஹிப் மற்றும் பதார் ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். 

துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் துரி தொகுதியில் வெற்றி உரையாற்றிய பகவந்த் மான் தன்னுடைய பதவியேற்பு விழா சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான நவன்சகர் மாவட்டத்தில் உள்ள கட்கர்காலனில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு அலுவலகங்களில் முதல்வரின் புகைப்படம் இடம்பெறாது என்றும் அதற்கு பதிலாக பகத்சிங், அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும் கூறினார். 

பதவியேற்ற பிறகு பள்ளிகள், சுகாதாரம், தொழில்துறை, விவசாயத்தை லாபகரமாக்குதல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து தான் என்னுடைய முதல்கட்ட நடவடிக்கைகள் தொடங்கும். பஞ்சாபில் ஒரு மாதத்தில் மாற்றத்தை காணத் தொடங்குவீர்கள் என்று கூறினார். 

மக்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்த அவர், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காதவர்கள் கவலைப்பட தேவையில்லை, ஏனெனில் வாக்களிக்காதவர்களுக்கும் இந்த புதிய அரசாங்கம் பாடுபடும்.

Next Story