சுற்றுலா வாகனம் ஓட்டும் பழங்குடியின பெண்கள்
ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே 60-க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்கள் மின்சார ஆட்டோ ஓட்டுநர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். வல்லபாய் படேல் சிலையைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது.
2021-ம் ஆண்டுக்கு முன்பு பழங்குடியின பெண்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அவர்களுக்கு புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளது. மின்சார ஆட்டோ ஓட்டுவதன் மூலம் தினமும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். ஆட்டோவுக்கு வாடகை கொடுத்தது போக, வீட்டுக்கு ரூ.700 முதல் ரூ.1,100 வரை எடுத்துச் செல்கின்றனர்.
இதுபற்றி படேல் சிலையை பராமரிக்கும் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் ராகுல் படேல், “மின்சார ஆட்டோ ஓட்டுவதற்கு அருகில் உள்ள மலைக்கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களுக்கு அரசின் திறன் வளர்ப்பு மையத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆட்டோவில் பயணம் செய்து சிலையைப் பார்வையிட்ட பிறகு, பார்க்க வேண்டிய மற்ற இடங்கள் குறித்த தகவல்களையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறார்கள். பழங்குடியின பெண்கள் ஓட்டும் இந்த ஆட்டோவில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்றார்.
Related Tags :
Next Story