டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? - அரசு பதில் தர சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? - அரசு பதில் தர சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Dec 2021 10:03 AM GMT (Updated: 8 Dec 2021 10:03 AM GMT)

டாஸ்மாக் மதுபான கடை நேரத்தை மாற்றியது குறித்து தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2 வருடங்களாகவே கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அவ்வப்போது சில நாட்கள் திறந்தாலும், தொற்று முழுமையாக நீங்காததால், அவைகள்  மூடப்பட்டன.

 பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அதன் நேரங்களும் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வந்தன.

எனினும், கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன. அதேசமயம், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கி வந்த நிலையில், கடந்த வாரம், இந்த நேரம் மாற்றியமைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் கொரேனா தொற்று முன் இருந்தது போலவே, பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அத்துடன், அறிவிப்பு உடனடியாக அமலுக்கும் வந்தது.

கொரோனா காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை குறைந்ததால் நஷ்டம் ஏற்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. எனவே, இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பதால் அதன் வருமானம் அதிகரிக்ககூடும். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், டாஸ்மாக்கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, 12 மணிமுதல் இரவு 10 வரை மாற்றியதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் நேற்றைய தினம் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், "தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 உட்பிரிவு ஏ ன் கீழ், தொழிற்சங்க சட்டத்தின்படி, வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று விதி உள்ளது. எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதம் எனவே, இந்த அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும்.. இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம். பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது' என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.. இந்த மனுவானது நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு விரைவில் வரஉள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3வது வாரத்திற்கு நீதிபதி பார்த்திபன் ஒத்தி வைத்தார்.

Next Story