வேட்பாளர் மரணம் - காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு


வேட்பாளர் மரணம் - காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 10 Feb 2022 9:37 AM GMT (Updated: 10 Feb 2022 9:37 AM GMT)

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. 

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 36-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். 

இதற்கிடையில், அதிமுக வேட்பாளரான ஜானகிராமன் இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணமடைந்ததால் 36-வது வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள 36-வது வார்டுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Next Story