திருப்பூர் அருகே நீச்சல் தெரியாததால் இளைஞர் நீரில் மூழ்கி பலி..!


திருப்பூர் அருகே நீச்சல் தெரியாததால் இளைஞர் நீரில் மூழ்கி பலி..!
x
தினத்தந்தி 5 March 2022 10:08 AM GMT (Updated: 5 March 2022 10:08 AM GMT)

திருப்பூர் அருகே கொடிவேரி பவானி ஆற்றில் தனது உறவினர்களுடன் குளிக்க வந்த இளைஞர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் சேவூர் மங்கரசு வளையபாளையம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் இளங்கோ (19), சேவூர் தனியார் பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று கொண்டப்பன்நாயக்கன் பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு வந்த இளங்கோ, தனது சித்தப்பா மகன் சீனிவாசன், மாமன் மகன் அர்ஜூனன் மற்றும் பாரதிக்குமார் ஆகியோருடன் கொடிவேரி பவானி ஆற்றுக்கு துணி துவைக்க வந்துள்ளனர்.

முதலில் துணிகளை துவைத்து கொண்ட பிறகு ஆற்றில் இறங்கிய இளங்கோ மற்றும் உடன் வந்த உறவினர்கள் குளித்து கொண்டு இருந்தனர், அருகில் குளிக்க வந்த இளங்கோவை காணாமல் உடன் வந்தவர்கள் ஆற்றில் தேடியுள்ளனர், நீச்சல் தெரியாமல் இளங்கோ ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததில் நீரில் மூழ்கியது தெரியவந்தது.

இளங்கோவுடன் உடன் வந்த உறவினர்கள் இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொடிவேரி ஆற்றில் மூழ்கிய இளங்கோவை தேடியதில் சடலமாக இளங்கோ மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் குழித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story