இளைஞர்களின் செல்போனுக்கு பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்


இளைஞர்களின் செல்போனுக்கு பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்
x
தினத்தந்தி 25 March 2022 4:16 PM GMT (Updated: 25 March 2022 4:16 PM GMT)

இளைஞர்களின் செல்போனுக்கு பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவை,

தொழில்நுட்பம் வளர, வளர புதுப்புது மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. முன்பு வழிப்பறி, திருட்டு போன்றவற்றில் மர்ம நபர்கள் நேரடியாக ஈடுபட்டனர். ஆனால் தற்போது நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கு எண், ரகசிய எண் உள்ளிட்டவற்றை வாங்கி பணத்தை எடுத்து மோசடி செய்கின்றனர்.

மேலும் செல்போனுக்கு குறுந்தகவல்கள் மூலம் லிங்க் அனுப்புகின்றனர். அதை அழுத்தி கேட்கும் விவரங்களை பதிவு செய்பவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிபோவதும் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இளைஞர்களை குறிவைத்து ஒரு கும்பல் நூதன முறையில் பண மோசடி செய்து வருகிறது.

இந்த கும்பல் செல்போனின் வாட்ஸ்-அப் எண்களுக்கு பெண்களின் ஆபாச படங்களை அனுப்பி வைக்கும். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நபர்களுக்கு தொடர்ந்து கவர்ச்சி படங்களை அனுப்பி வைப்பார்கள். பின்னர் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறுவார்கள். இதற்கு விருப்பம் தெரிவிப்பவர்களிடம், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புமாறு கூறுவார்கள். அதை நம்பும் இளைஞர்கள் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துவர். பணம் சென்றதும் அவர்கள் தொடர்பை துண்டித்து கொள்வர்.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. பெண்களின் ஆபாச புகைப்படங்களை அனுப்பி மோசடி செய்வது பெரும்பாலும் வட மாநிலங்களை சேர்ந்த கும்பல்களாக உள்ளன. இவர்கள் சபல புத்தி கொண்ட இளைஞர்களுக்கு பெண்களின் ஆபாச மற்றும் நிர்வாண படங்களை அனுப்பி வைப்பர். பின்னர் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய கூறுவர்.

இதை உண்மை என நம்பும் ஆண்கள் அந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி ஏமாறுவார்கள். பணம் அனுப்பாத நபர்களை, இந்த கும்பல்கள் செல்போனில் தொடர்பு கொண்டு நீ செல்போனில் இளம்பெண்களின் ஆபாச படம் பார்த்ததற்கு ஆதாரத்துடன் உள்ளது. நாங்கள் கேட்கும் தொகையை தரவில்லை என்றால் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவேற்றம் செய்து விடுவோம் என்று மிரட்டி பணம் பறிப்பார்கள். அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து பணத்தை இழந்தவர்களும் உண்டு.

இதுபோன்ற மோசடி கும்பல்கள் வடமாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு சிறு கிராமத்தில் வங்கி கணக்கை வைத்து இருப்பார்கள். அதற்கு பணம் வந்ததும் உடனே எடுத்து விடுவார்கள். அவர்களை போன்ற நபர்களை கண்டுபிடிப்பது மிக சவாலான பணியாக உள்ளது. எனவே இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story