பாகூர் அருகே கோர விபத்து ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதி டிரைவர் பலி தந்தை மகன் படுகாயம்


பாகூர் அருகே  கோர விபத்து ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதி டிரைவர் பலி தந்தை மகன் படுகாயம்
x
தினத்தந்தி 1 April 2022 4:25 PM GMT (Updated: 1 April 2022 4:25 PM GMT)

பாகூர் அருகே அதிகாலையில் ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். தந்தை-மகன் படுகாயம் அடைந்தனர்.

பாகூர்
பாகூர் அருகே ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். தந்தை-மகன் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ-டிப்பர் லாரி மோதல்

கடலூர் முதுநகர் அடுத்த சோழங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 
நேற்று அதிகாலை இவர் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (36), அவரது மகன் ஹர்பீஸ் (8) ஆகியோரை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார். 
கடலூர்-புதுச்சேரி மெயின் ரோட்டில் காட்டுக்குப்பம் பகுதியில் வந்த போது புதுச்சேரியில் இருந்து கடலூர் சென்ற டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பன்னீர்செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

போலீசார் விசாரணை

ஆட்டோவில் பயணம் செய்த செல்வக்குமார், அவரது மகன் ஹர்பீஸ் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் காயமடைந்த தந்தை, மகனை மீட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான பன்னீர்செல்வத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story