ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்...!


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்...!
x
தினத்தந்தி 21 April 2022 10:15 AM GMT (Updated: 21 April 2022 9:57 AM GMT)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஶ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள  நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான சூரியன் ஸ்தலமாக உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நிகழ்ச்சி முதல் நாளான இன்று காலை 7.15 மணிக்கு  கோவில் கொடிப்பட்டம் நான்கு மாடவீதிகளில் சுற்றிவரப்பட்டது. இதனையடுத்து காலை7.55 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தங்கத் தோளுக்கினியானில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற உள்ளது.

பின்னர் 2-ஆம் திருவிழாவான 22-ந்தேதி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, காலை 11 மணிக்கு தங்கமசகிரியில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டியும், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும்.

3-ஆம் திருவிழாவான 23-ம் தேதி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, காலை 11 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு அனுமார் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 

 4-ஆம் திருவிழாவான 24-ம் தேதி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் சுவாமி வீதி உலா புறப்பாடு, காலை 11 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டி, மாலை 6 மணிக்கு ஷேச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.  5-ஆம் திருவிழாவான 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு கள்ளபிரான் சுவாமி, காசினி வேந்தபெருமாள் சுவாமி, விஜயாசனப் பெருமாள், சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, மாலை 4 மணிக்கு திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டி இரவு 9 மணிக்கு குடவரை பெருவாயில் ஹம்ஸ வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர்சேவை நான்கு கருடவகனத்தில் ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி, ஸ்ரீபொலிந்துநின்றபிரான் சுவாமி, ஸ்ரீ காசினி வேந்த பெருமாள் சுவாமி, ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் சுவாமிகளின் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

இதுபோன்று 6-ஆம் திருவிழாவான 26-ம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம், காலை 7.30 மணிக்கு கள்ளபிரான் கோயிலுக்குள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டியும், தொடர்ந்து மாலை 6 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். 

இதனைத் தொடர்ந்து 7-ஆம் திருவிழாவான 27-ம் தேதி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதியுலா புறப்பாடு, காலை 11 மணிக்கு நாச்சியார் சன்னதியில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி, தொடர்ந்து மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு வீதி புறப்பாடும், இரவு 7 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலம் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து 8-ஆம் திருவிழாவான 28-ம் தேதி காலை 7.30  மணிக்கு கொடிமரம் சுற்றி எழுந்தருளல், காலை 11 மணிக்கு திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டியும், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு குதிரை வாகனத்தில் திருத்தேர் கடாச்ஷம் நடக்கிறது.

இதனை தொடர்ந்து  9-ஆம் திருவிழாவான 29-ம் தேதி காலை 4.30 மணிக்கு கொடிமரம் சுற்றி எழுந்தருளல் காலை 5-மணிக்கு மேல் 5.45 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும்,

இதனை தொடர்ந்து காலை 7.15மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும், பின்னர் தேர் நிலையை வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதனை தொடர்ந்து 10-ஆம் திருவிழாவான 30-ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீ சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரியும், காலை 11மணிக்கு தீர்த்த விநியோக கோஷ்டியும், இரவு 9 மணிக்கு சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பின்னர், 11-ஆம் திருவிழாவான அடுத்த மாதம் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி சயன கொறட்டில் வைத்து நடைபெறும். 

இத்தகைய திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன்,ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத், பட்டர்கள் ரமேஷ், சீனு, வாசு ஆகியோர் செய்து உள்ளனர். 

மேலும் ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பிவெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்டபோலீசார் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Next Story