சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது...!


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது...!
x
தினத்தந்தி 8 May 2022 10:10 AM GMT (Updated: 8 May 2022 10:10 AM GMT)

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

நாகை,

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் பகுதியில் ஊராட்சி தொடக்கப்பள்ளி  ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் மொத்தம் 8 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக வேதாரண்யத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் பணியாற்றி வருகின்றார். 

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமிக்கு  தமிழ்செல்வன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் குளத்தில் தள்ளி கொன்று விடுவேன் என்று சிறுமிக்கு தமிழ்செல்வன் கொலை  மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதனால் பெற்றோர்களிடம் சொல்ல தயங்கிய சிறுமி பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாயார் அவரிடம் விசாரித்த போது பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயார் போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் மகளுக்கு நடந்த அநீதி குறித்து வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டு உள்ளார். 

இதை பார்த்த நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நேரடியாக சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் போக்சோ வழக்கில் சிறையில் அடைத்தனர்.  

மேலும் இது குறித்து தகவலறிந்த கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் தமிழ்செல்வனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.



Next Story