அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்..!
அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற புகழுடன் விளங்குகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக தேர்த் திருவிழா நடைபெறவில்லை. தற்போது சகஜ நிலை திரும்பியுள்ளதால் இந்த வருடம் கடந்த 5-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது.
6-ம் தேதி சூரியசந்திர மண்டல காட்சிகள், 7-ம் தேதி கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகள், 8-ம் தேதி புஸ்பவிமானம் கைலாசவாகன காட்சிகள் ஆகியவை நடந்தது.
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
9-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. 10-ம் தேதி கற்பகவிருட்சம், திருக்கல்யாண உற்சவமும், உற்சவமூர்த்திக்கும் கருணாம்பிகை அம்மனுக்கும் ஊஞ்சல் விழா நடந்தது.
கோவில் அர்ச்சகர் திருமாங்கல்யபூஜை செய்து கல்யாண உற்சவம் நடத்தி வைத்தார். அப்போது பெங்களூரு வேத ஆகம பாடசாலை முதல்வர் சந்திரமூர்த்தி சிவம் தலைமையில் மாணவர்கள் வேத மந்திரம் மற்றும் திருமுறை பாடினர். இதைத்தொடர்ந்து யானை வாகனத்தில சுவாமி திருவீதி உலா நடந்தது.
அபிஷேக ஆராதனை
11-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. வினாயகப்பெருமான், அவினாசியப்பர், கரிவரதராஜ பெருமாள் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு விஷேச அபிஷேக ஆராதனை நடந்தது.
அன்று காலை 6.30 மணியளவில் சிறப்புநாதஸ்வரம் இசைக்க உற்சவமூர்த்திகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரிய தேருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது பஞ்சவாத்தியங்கள் ஒலிக்க சுவாமிகள் ரதத்தின் மீது அமர்த்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பெரிய தேரில் வீற்றிருக்கும் சோமஸ்கந்தர் உமாமகேஸ்வரி, சிறிய தேரில் வீற்றிருக்கும் ஸ்ரீகருணாம்பிகை அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
இன்று காலை 8.30 மணியளவில் ரதத்தின் மீது வீற்றிருந்த உற்சவமூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆன்மிக சான்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் சிவசிவ கோஷத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
அழகுன்னா அழகு அவினாசி தேரழகு என்பதற்கு ஏற்றவாரு தேர் அசைந்தாடி நகர்ந்தது. பின்னர் அவினாசி மேற்கு ரதவீதி குலாலர் மண்டபம் அருகே நிறுத்தப்பட்டது. மீண்டும் நாளை காலை 8 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story