குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு...!


குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு...!
x
தினத்தந்தி 13 May 2022 9:57 AM GMT (Updated: 13 May 2022 9:57 AM GMT)

குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குளித்தலை, 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் கோவில் காவிரியின் தென்கரையில் அமையப்பெற்றுள்ள. சிவதலங்களில் முதன்மையானது. மேலும் பாடல் பெற்ற சிவத்தலமான உள்ளது.

இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து அன்று இரவு உற்சவ மூர்த்தி புஷ்ப விமானத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதன்பின்னர் ஒவ்வொரு நாளும் பகலில் பல்லக்கிலும், இரவில் நந்தி, கமல வாகனம், பூத, சிம்ம, கைலாச, சேஷ, வெள்ளி ரிஷப வாகனம், காமதேனு, யானை, ஹம்ச, இந்திர, குதிரை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸவரர் உற்சவமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள். 

இதனை தொடர்ந்து 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இக்கோவில் மலையை சுற்றி தினந்தோறும் பகல் மற்றும் மாலை நேரங்களில் சாமியின் வீதி உலா நடந்தது. கடந்த 9 - ந் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று  இரவு குதிரை மற்றும் புஷ்ப வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. 

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி இன்று சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதணைகள் நடத்தப்பட்டது. 

இதையடுத்து அலங்கரிங்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 6.30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை கோவில் தேரிலும், தேர் செல்லும் பகுதிகளிலும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் கொட்டி வந்தனர்.

இக்கோவிலில் இருந்து இன்று காலை இழுக்கப்பட்ட தேர் மீண்டும் நாளை மாலை நிலையை அடைய உள்ளது. இந்த தேரோட்டத்தில் குளித்தலை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Next Story