சேலம்: வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு


சேலம்: வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 23 Nov 2021 10:24 AM GMT (Updated: 23 Nov 2021 10:24 AM GMT)

சேலத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், பத்மநாபன் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு வீரர் பத்மநபன், அவரது மனைவி தேவி, கார்த்திக்ராம்(18), எல்லம்மாள் ஆகியோர்  உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story