குடும்பத்தினர் முன்னிலையில் "கோல்டன் கேப்" பெற்ற கோலி; மறக்க முடியாத தருணம் என நெகிழ்ச்சி


குடும்பத்தினர் முன்னிலையில் கோல்டன் கேப் பெற்ற கோலி; மறக்க முடியாத தருணம் என நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 March 2022 9:52 AM GMT (Updated: 4 March 2022 9:52 AM GMT)

கோல்டன் கேப் விருதை பெறுவதற்கு தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கோலி மைதானத்திற்குள் வந்தார்.

மொகாலி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும்.இரத்னால் இன்று போட்டி தொடங்குவதற்கு முன்பாக  பிசிசிஐ சார்பில் விராட் கோலிக்கு சிறப்பு அன்பளிப்பு நிகழ்ச்சி மொகாலி மைதானத்தில் நடத்தப்பட்டது.முன்னதாக விருதை பெறுவதற்கு தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கோலி மைதானத்திற்குள் வந்தார்.

பின்னர் விராட் கோலிக்கு ’கோல்டன் கேப்’ கொடுத்து பாராட்டிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலியின் கடந்த வந்த பாதையை நினைவு கூர்ந்து பாராட்டினார். 

இது குறித்து ராகுல் டிராவிட் பேசியதாவது:

விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான சான்றாக 100-வது டெஸ்ட் போட்டி என்னும் மைல்கல்லை நீங்கள் எட்டியுள்ளீர்கள். வியர்வை, ஒழுக்கம், தைரியம், திறமை, உறுதி, ஆசை மற்றும் கவனம் என அனைத்து உங்களிடம் இருந்ததால் தான் உங்களது இந்த  டெஸ்ட் பயணம் மிகச்சிறந்த பயணமாக அமைந்துள்ளது. இந்த பயணத்திற்காக நீங்கள் நிச்சயம் பெருமைப்படலாம் என தெரிவித்தார்.

பின்னர் விருதை பெற்று கொண்ட கோலி கூறியதாவது;

இந்த பயணத்தில் உடனிருந்த குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி . சக இந்திய அணி வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன். சிறிய வயதில் டிராவிட்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்னும் வீட்டில் வைத்திருக்கிறேன்.

 இப்போது அவரது கையால் 100வது டெஸ்ட் போட்டிக்கான கோல்டன் கேப் வாங்கியதில் பெருமைப்படுகிறேன், இது மறக்க முடியாத தருணம் என அவர் தெரிவித்தார்.

Next Story