சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை தேரோட்டம்


சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை தேரோட்டம்
x
தினத்தந்தி 5 May 2024 3:22 AM GMT (Updated: 5 May 2024 3:32 AM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 8-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தேர் திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தோளுக்கினியானில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார்.

சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரம், கிளி மாலை உள்ளிட்டவை பெருமாளுக்கும் தாயாருக்கும் அணிவிக்கப்படுகிறது.

7-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story