எல்லோருக்கும் திறமை இருக்கிறது - அனுஷா


எல்லோருக்கும் திறமை இருக்கிறது - அனுஷா
x
தினத்தந்தி 28 Feb 2022 5:30 AM GMT (Updated: 26 Feb 2022 9:36 AM GMT)

வழிகாட்டுதலும், விழிப்புணர்வும் தான் பலரது தேவையாக உள்ளது. எனவே மாணவர்களுக்கும், பெண்களுக்கும் அவர்கள் எடுக்கும் முயற்சியில் ற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை அளிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறேன்.

“எல்லோருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஒரே மாதிரி உள்ளன என்ற அப்துல் கலாமின் வரிகள், வாய்ப்புகளை தேர்வு செய்வதற்கான வழியை அமைத்துத் தருபவராக என்னை மாற்றியது’’ என்கிறார் திருச்சியைச் சேர்ந்த முனைவர் அனுஷா பிரேம் ஆனந்த்.

அவரது பேட்டி...

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?
நான் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று ஆசிரியராகப் பணிபுரிந்தேன். படிப்படியாக பயிற்சியாளராக உயர்ந்து, இன்று எனது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகிறேன். பிறரை வாழ்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இந்நிறுவனத்தை உருவாக்கக் காரணம். 

பலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால், நிர்வாகம் முதல் டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் வரை எல்லாவற்றையும் கற்றேன்.

பிறரின் தேவைகளை எவ்வாறு அறிந்து கொள்கிறீர்கள்?
எல்லோருக்குள்ளும் திறமை இருக்கிறது. ஆனால் கிடைக்கும் வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் இன்றியே பலரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய திறமையை, அவர்களுக்கு புரிய வைக்கும் சிறு உதவியை நான் செய்கிறேன். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பலருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறேன்.

தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் உங்கள் பங்கு என்ன?
தொழில் முனைவோர்கள், தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தோடு செயல்படுகிறார்கள். குறிப்பாகப் பெண்கள் சொந்தக் காலில் நிற்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் உதவுதல் போன்றவற்றை செய்து வருகிறேன்.

குடும்பத்திற்கான நேரத்தை எவ்வாறு ஒதுக்குகிறீர்கள்?
வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பது, நம்முடைய திறமையை மட்டும் சார்ந்தது இல்லை. குடும்பத்தினருடைய  ஒத்துழைப்பும் அதற்கு முக்கியமானது. குடும்பத்துக்குத் தேவையான நேரத்தை ஒதுக்கி, திட்டமிட்டுச் செயல்படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

நீங்கள் பெற்ற விருதுகள் குறித்து?
சிறந்த கார்ப்பரேட் விருது, மதிப்புறு முனைவர் பட்டம் என மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தியதற்காக பல விருதுகள் கிடைத்துள்ளது.

சமூகத்துக்கான உங்கள் செயல்பாடுகள் என்ன? 
வழிகாட்டுதலும், விழிப்புணர்வும் தான் பலரது தேவையாக உள்ளது. எனவே மாணவர்களுக்கும், பெண்களுக்கும் அவர்கள் எடுக்கும் முயற்சியில் ற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை அளிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறேன். பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன். 

உங்கள் எதிர்காலத் திட்டங்கள் குறித்து?
பலருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அதுமட்டுமின்றி பல தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்காலத் திட்டம். 

Next Story