மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் ராஜகோபுர ஆண்டு திருவிழா
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் ராஜகோபுர ஆண்டு திருவிழா நேற்று காலை 6 மணிக்கு பால் பணிவிடை, உகபடிப்பு, மதியம் பணிவிடை உச்சிபடிப்புடன் தொடங்கியது.
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 6-ந்தேதி ராஜகோபுர ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி 20-ம் ஆண்டு ராஜகோபுர ஆண்டு திருவிழா நேற்று காலை 6 மணிக்கு பால் பணிவிடை, உகபடிப்பு, மதியம் பணிவிடை உச்சிபடிப்புடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான பால் அன்னம் பொங்கலிடும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. இனிப்பு, உப்பு இல்லாமல் பச்சரிசி, பாசிப்பயிறு, தேங்காய் துண்டுகள், ஐந்து காய்ந்த மிளகாய் போன்ற பொருட்கள் கொண்டு, இப்பொங்கல் தயாரிக்கப்படும். இதில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பால் அன்னம் பொங்கலிட்டு அய்யா வைகுண்ட தர்மபதியை வழிபட்டனர்.
முன்னதாக பால் அன்னத்துக்கு உலை ஏற்றுவதற்கு அய்யா வைகுண்டர் மூலஸ்தானத்தில் இருந்து ஜோதியை கையில் ஏந்தியபடி தலைவர் துரைப்பழம் மற்றும் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்தனர். அன்னத்துக்கு உலை ஏற்றும் நிகழ்ச்சியை டி.ராமராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் பால் பணிவிடை, உகபடிப்பு முடிந்து, இரவு அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வருதல் நிகழ்வுடன் விழா நிறைவடைந்தது.
Related Tags :
Next Story