பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்


பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 8 Feb 2022 10:25 AM GMT (Updated: 8 Feb 2022 10:25 AM GMT)

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மறைந்த ஸ்ரீதரின் கூட்டாளியான ரவுடி தினேஷ் மீது 7 கொலை, 20 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 38 வழக்குகள் உள்ளன. 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் சிவகாஞ்சி போலீசில் கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் ரவுடி தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தினேசை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் துணை கண்காணிப்பாளர் ஜுலியஸ் சீஸர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தேடி வருவதை அறிந்ததும் ரவுடி தினேஷ், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் தன்னை விடாமல் தேடி வருவதால் ரவுடி தினேஷ், சைதாப்பேட்டை பெருநகர 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். தினேசை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.


Next Story