ரூ.1½ கோடி வாடகை பாக்கி நிலுவை: மாநகராட்சிக்கு சொந்தமான 41 கடைகளுக்கு ‘சீல்’


ரூ.1½ கோடி வாடகை பாக்கி நிலுவை: மாநகராட்சிக்கு சொந்தமான 41 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 24 March 2022 10:18 AM GMT (Updated: 24 March 2022 10:18 AM GMT)

மாநகராட்சிக்கு சொந்தமான 41 கடைகள் வாடகை பாக்கி செலுத்தாமல் ரூ.1.50 கோடியாக நிலுவையில் இருந்து வந்ததாக தெரிகிறது. மாநகராட்சி ஊழியர்கள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளில் ஊழியர்களை வெளியேற்றி விட்டு பூட்டு போட்டு கடைகளுக்கு சீல் வைத்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 8-வது மண்டலத்துக்குட்பட்ட அலுவலகம் அமைந்தகரையில் செயல்பட்டு வருகிறது. அமைந்தகரை, அபிபுல்லா சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 41 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இங்கு பாத்திரக்கடை, உணவகம், காய்கறி, இனிப்பகம் உள்ளிட்ட கடைகள் நீண்ட நாட்களாக வாடகை பாக்கி செலுத்தாமல் ரூ.1.50 கோடியாக நிலுவையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் வாடகை பாக்கியை செலுத்துமாறு அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஆனால் இதுவரை வாடகை பாக்கி செலுத்தாததால் மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் லட்சுமணன், ரவிச்சந்திரன் மற்றும் உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் வந்த மாநகராட்சி ஊழியர்கள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளில் ஊழியர்களை வெளியேற்றி விட்டு பூட்டு போட்டு கடைகளுக்கு சீல் வைத்தனர்.

அப்போது சில கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், தமிழக அரசின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கோயம்பேடு மார்க்கெட்டில் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக குழு அதிகாரி சாந்தி தலைமையில் நேற்று கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக 8 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.


Next Story