இந்தியாவில் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி- ஒரே நாளில் 2.6 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டன


இந்தியாவில் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி- ஒரே நாளில் 2.6 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டன
x
தினத்தந்தி 17 March 2022 10:28 AM GMT (Updated: 17 March 2022 10:28 AM GMT)

இந்தியாவில் 12-14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நாளில் 2.60 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும், பிப்ரவரி 2-ந் தேதியில் இருந்து முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதியில் இருந்து, 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணைநோய் கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.ஏப்ரல் 1-ந் தேதி முதல், 45 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 18 வயதை தாண்டியவர்களுக்கு மே 1-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் இணைநோய் கொண்ட 60 வயதை தாண்டியவர்களுக்கு 3-வது டோசாக பூஸ்டர் தடுப்பூசி, ஜனவரி 10-ந் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 12 வயதை தாண்டிய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வயதினருக்கு செலுத்த ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது.

இதை தொடர்ந்து 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது .இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நாளில்   12-14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நாளில் 2.60 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது 

Next Story