புரோ ஆக்கி லீக்: தென்ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தியது இந்தியா..!


புரோ ஆக்கி லீக்:  தென்ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தியது இந்தியா..!
x
தினத்தந்தி 14 Feb 2022 8:57 AM GMT (Updated: 14 Feb 2022 8:57 AM GMT)

புரோ ஆக்கி லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியுடனான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

போட்செப்ஸ்ட்ரூம்,

9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது. 

இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றி அசத்தியது. முடிவில் 10-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தியது.

இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் 4 கோல்கள் (36, 52, 60, 60-வது நிமிடங்களில்) அடித்தார். ஷிலநந்தா லக்ரா(27, 48-வது நிமிடங்களில்) 2 கோல்கள் அடித்தார். அதேபோல, சுரேந்தர் குமார்(15-வது நிமிடம்), மன்தீப் சிங்(28-வது நிமிடம்), சுமித்(45-வது நிமிடம்)  மற்றும் ஷாம்ஷெர் சிங்(56-வது நிமிடம்)  ஆகியோர் தலா 1 கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதன்மூலம், கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ் அணியுடன் அடைந்த தோல்விக்கு பிறகு வெற்றி கணக்கை இந்தியா தொடங்கி உள்ளது. தொடர்ந்து அடுத்த போட்டியில், ஸ்பெயின் அணியுடன் இந்தியா மோதுகிறது. இந்த போட்டி இம்மாதம் 26ந்தேதி ஒடிசாவின் புவனேஷ்வர் நகரில் உள்ள கலிங்கா ஆக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது.

Next Story