அனில் அம்பானி மீதான வங்கி மோசடி வழக்கு: மத்திய அரசு, சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.;
புதுடெல்லி,
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் குழுமத்தின் அதிபர் அனில் அம்பானிக்கு எதிரான வங்கி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.இதற்கிடையே, இந்த மோசடியில் உடந்தையாக இருந்த வங்கிகள் பற்றியோ, அவற்றின் அதிகாரிகள் பற்றியோ சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை என்றும், வங்கிகள் மீது கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் முன்னாள் மத்திய செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, மனுதாரரின் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து, மனுவுக்கு 3 வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.