திருமண வாய்ப்பை மூன்று முறை தவிர்த்தேன் - திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? மனம் திறந்தார் சுஷ்மிதா சென்

முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
திருமண வாய்ப்பை மூன்று முறை தவிர்த்தேன் - திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? மனம் திறந்தார் சுஷ்மிதா சென்
Published on

மும்பை,

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சுஷ்மிதா சென் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். அதிகளவில் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள நடிகை சுஷ்மிதா சென், தமிழில் 1997-இல் வெளியான 'ரட்சகன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். நடிகை சுஷ்மிதா சென், தன்னுடைய 24 வயதில் ஒரு குழந்தையை தத்தெடுத்து தாயானார்.

இந்நிலையில், முன்னணி இந்தி நடிகையாக வலம் வந்த டுவிங்கிள் கண்ணா தொகுத்து வழங்கும் 'தி ஐகான்ஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் சுஷ்மிதா. அதில் தனது திருமணம் குறித்து மவுனம் கலைத்தார் சுஷ்மிதா சென்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரஸ்யமான ஆண்களை சந்தித்துள்ளேன். ஆனால், அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன்.

இதன் காரணமாக, நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு இதில் துளியளவும் தொடர்பு இல்லை. என் வாழ்க்கையில் வந்து சென்ற நபர்களை எனது குழந்தைகள் இருவரும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு மரியாதையும், அன்பையும் அளித்துள்ளனர். அதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.

மூன்று முறை நான் திருமணம் செய்துகொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது. மூன்று முறையும் கடவுள் என்னை காப்பாற்றினார். அவர்களுடன் நான் சந்தித்த சிக்கல்களை என்னால் வெளியில் சொல்ல முடியாது. கடவுள் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார்."

இவ்வாறு அவர் கூறினார்.

சுஷ்மிதாவால் ரெனி என்ற குழந்தை 2000ம் ஆண்டில் தத்தெடுக்கப்பட்டார், மேலும் அலிசா 2010இல் தத்தெடுக்கப்பட்டார். இவர்கள் ஒரே குடும்பமாக, வாழ்ந்து வருகின்றனர். அவருடைய மூத்த வளர்ப்பு மகள் ரெனி ஒரு குறும்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com