

புதுடெல்லி,
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றை விலைக்கு வாங்க பிரபல கண் ஆஸ்பத்திரி குழுமம் முடிவு செய்தது. அதற்காக இந்தூர் ஆஸ்பத்திரி நிர்வாகிகளுடன் ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. பணத்தை வாங்கி கொண்டு விதிகளை மீறி தன்னிச்சையாக அந்த ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது. இதனால் ஒப்பந்தத்தை மீறியதாக கூறி பிரபல கண் ஆஸ்பத்திரி குழுமம் இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் முறையிட்டது. விசாரணையில் வட்டியுடன் ரூ.16 கோடியை உடனடியாக டெபாசிட் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் தன்னை பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி என அறிமுகம் செய்துக்கொண்டு மர்மநபர் ஒருவர் பிரபல கண் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் இந்தூர் ஆஸ்பத்திரிக்கு கொடுத்த பணத்தை மறந்துவிடுமாறு எச்சரிக்கை விடுத்து மிரட்டியும் உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தது.
அதன்பேரில் சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து பிரதமர் அலுவலக அதிகாரி என்ற போர்வையில் மோசடியில் ஈடுபட்ட மயங்க் திவாரி என்பவரை கைது செய்தனர்.