பாஜகவில் இணைந்த கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பாஜகவில் இணைந்த கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
image courtesy: BJP Goa twitter
image courtesy: BJP Goa twitter
Published on

பனாஜி,

கோவாவில் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த புதன் கிழமை அன்று எதிர்க்கட்சியாக இருந்து வரும் காங்கிரசைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் முதல்-மந்திரியை நேரில் சந்தித்து பாஜகவில் இணைந்தனர்.

அவர்களில் முன்னாள் முதல்-மந்திரி திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா ஆகியோரும் அடங்குவர். அவர்கள் தவிர, காங்கிரஸ் எம்எல்ஏக்களான தெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செகீரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகியோர் பாஜகவில் சேர்ந்தனர்.

இந்த நிலையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் மற்றும் பாஜக மாநில தலைவர் சதானந்த் தனவாடே தலைமையில் எம்எல்ஏக்கள் நாளை காலை பிரதமரை சந்திக்க உள்ளதாக கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆறு எம்எல்ஏக்கள் இன்று இரவு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுவதாகவும் மைக்கேல் லோபா மற்றும் திகம்பர் காமத் நாளை டெல்லியில் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் டெல்லி பயணத்தின் போது அவர்கள் கட்சியின் தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரையும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களுடனான சந்திப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com