

மும்பை,
அபுதாபியில் இருந்து இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிற்கு நேற்று காலை ஏர்பஸ் ஏ330 ரக விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து 40 நிமிட பயண தூரத்தில் நடுவானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது அதில் பயணித்த இந்தோனேசியாவை சேர்ந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் அந்த விமானத்தை மும்பையில் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் விமானம் தரை இறங்குவதற்கு முன் மும்பை விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால் அந்த பெண் பறக்கும் விமானத்தில் நடுவானிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மும்பையில் அந்த விமானம் தரையிறங்கிய உடன் தாய், சேய் இருவரும் சிகிச்சைக்காக அந்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் மீண்டும் ஜகார்த்தா புறப்பட்டு சென்றது.