அசாம் வெள்ளம்; பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு

அசாம் வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

திஸ்பூர்,

அசாமில் கடந்த மாதத்தில் இருந்து மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதனால், பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதுதவிர, திகவ், ஜியா-பராலி, பேகி, ஷியாரா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவை கடந்து ஓடுகிறது. அசாமில் வெள்ள பாதிப்புக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அசாம் வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 10 காண்டாமிருகங்கள் உட்பட 180 வன விலங்குகள் இறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 75 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2,406 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 2.95 லட்சம் பேர் 316 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com