சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

காவல் துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளி வளாகங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

சண்டிகார்,

சண்டிகார் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 26 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. நாட்டில் குடியரசு தின கொண்டாட்டத்திற்கு 2 நாட்களுக்கு பின்னர் வந்த இந்த அச்சுறுத்தலால் அனைத்து பள்ளிகளும் உஷாராகி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

உடனடியாக மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சண்டிகார் காவல் துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளி வளாகங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

சில பள்ளிகள், சொந்த பேருந்துகளை பயன்படுத்தி குழந்தைகளை வீட்டிற்கு திருப்பி அனுப்பின. எனினும், நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தனியார் வாகனங்களில் பள்ளி வளாகங்களுக்கு விரைந்து சென்று அவர்களை அழைத்து சென்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் கூட ஏற்பட்டது.

10 அரசு பள்ளிகள் மற்றும் 5 பிரபல தனியார் பள்ளிகள் உட்பட 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்டு இருந்தது என கல்வி துறை தெரிவித்து உள்ளது. இதில், காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு உள்ளன என பல பள்ளிகளின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com