

ஜோத்பூர்,
சூப்பர்சோனிக் ரக ஏவுகணையான பிரமோஸ் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. ராஜஸ்தானின் பொக்ரான் தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ஏவுகணை 290 கி.மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்று இலக்கை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பான MTCR -ல் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா உறுப்பினர் ஆனதன் மூலம், இந்தியா- ரஷ்யா கூட்டுத்தயரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணையில் சில தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை அகற்றும் ஒப்புதல் கிடைத்தது. இதன்மூலம், ஏவுகணை செல்லும் தூரத்தை 400 கி.மீட்டர் வரை நீட்டிக்க முடியும். பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை சுகோய்-40 ரக போர் விமானம் மூலம் செலுத்தவைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.