

புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ. பயிலும் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்கள் தேர்வில் சாதாரண கால்குலேட்டரை பயன்படுத்த இந்த ஆண்டு முதல் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த வசதியை பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி முதல்வரின் வழியாக வருகிற 28-ந் தேதிக்குள் சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய சான்றுகள் இல்லாமல் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேர்வின்போது கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி கிடையாது.
இந்த தகவலை சி.பி.எஸ்.இ. ஆணையர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி இருக்கிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் மடிக்கணினி மூலம் தேர்வு எழுதும் வசதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.