

புதுடெல்லி,
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ராம்ஸ்வரூப் சர்மா, மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மக்களவை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் நந்த் குமார் சிங் சவுகான் மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதியின் மக்களவை உறுப்பினர் மோகன் தேல்கர் ஆகியோர் மரணமடைந்தனர்.
இதையடுத்து, காலியாக உள்ள இந்த 3 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதேபோல், பல்வேறு காரணங்களால் காலியாக இருக்கும் பீகார், அசாம், மேற்கு வங்காளம், மிசோரம், மேகாலயா, ராஜஸ்தான், அரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி , காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
இதில் இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் மற்றும் இந்திய தேசிய லோக்தள தலைவர் அபய் சவுதலா உள்பட பல முக்கியமான வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
மேற்கூறிய இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.