'முறைகேடுகள் இன்றி தேர்வுகளை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது' - மத்திய கல்வி மந்திரி

முறைகேடுகள் இன்றி தேர்வுகளை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
'முறைகேடுகள் இன்றி தேர்வுகளை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது' - மத்திய கல்வி மந்திரி
Published on

புதுடெல்லி,

நடப்பாண்டு நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பல புகார்கள் எழுந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. மேலும், மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முறைகேடுகள் இன்றி தேர்வுகளை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் நேர்மையான முறையில், குறைகள் இல்லாமல் நடத்துவதே அரசின் முன்னுரிமையாகும். இதற்காகவே மோடி அரசாங்கம் கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

முறைகேடுகள் இன்றி, வெளிப்படையான முறையில் தேர்வுகளை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. தேசிய தேர்வு முகமையை மறுசீரமைப்பு செய்வதற்கு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை நடத்துவதில் முறைகேடு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். சி.பி.ஐ. தனது கடமையை செய்து வருகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com