மதத்தின் அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை - பிரபல ஷாப்பிங் மால் விளக்கம்

லக்னோவில் சமீபத்தில் திறக்கப்பட்ட மாலில் ஒரு குழுவினர் திடீரென புகுந்து, தொழுகை நடத்துவதைக் காட்டும் வீடியோ வெளியானது.
மதத்தின் அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை - பிரபல ஷாப்பிங் மால் விளக்கம்
Published on

லக்னோ,

பிரபல ஷாப்பிங் வளாகமான "லுலு மால்" ஜூலை 10 அன்று லக்னோவில் திறக்கப்பட்டது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தால் திறந்து வைக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர் யூசுப் அலி எம்.ஏ தலைமையிலான அபுதாபியை தளமாகக் கொண்ட லுலு குழுமத்துக்கு இந்த மால் சொந்தமானது.

இந்நிலையில், லக்னோவில் சமீபத்தில் திறக்கப்பட்ட லுலு மாலில் ஒரு குழுவினர் திடீரென புகுந்து, தொழுகை நடத்துவதைக் காட்டும் வீடியோ வெளியானது. இதனையடுத்து முஸ்லீம் சார்புடைய நிறுவனமாக பாகுபாடு காட்டி, அந்நிறுவனம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டது.

இதனை அந்நிறுவனம் மறுத்துள்ளது. "எங்கள் ஊழியர்கள் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள், சாதி, வகுப்பு அல்லது மதத்தின் அடிப்படையில் அல்ல" என்று தெரிவித்துள்ளது.

லுலு குரூப் இன்டர்நேஷனலின் தலைமையகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் உள்ளது. மால் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லுலு மால் நிர்வாகம் எந்தவித பாகுபாடும் இல்லாமல் வணிகத்தை நடத்தும் முற்றிலும் தொழில்முறை நிறுவனம் ஆகும். அதன் ஊழியர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்.

சில சுயநல சக்திகள் எங்கள் நிறுவனத்தை குறிவைக்க முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. ஊழியர்களில் 80 சதவீதம் இந்துக்கள் உள்ளனர், மீதமுள்ளவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது.

மால் வளாகத்தில் (பொது இடத்தில்) அனுமதியின்றி தொழுகையை ஏற்பாடு செய்ய முயன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மால் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மால் வளாகத்தில் சிலர் புகுந்து தொழுகை நடத்தியதை கண்டித்து, எதிர்வினை ஆற்றும் விதமாக கடந்த சனிக்கிழமையன்று, லுலு மாலில் நுழைந்து அனுமான் சாலிசா பாடலை பாடத் தொடங்கிய இருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com