

டேராடூன்
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கிராஜாடி என்று பெயர் கொண்ட அரியவகை மூலிகையை வைத்திருந்த மஹேந்திர சிங் எனும் நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இம்மூலிகையை இமயமலையின் வயாகரா என்று அழைக்கின்றனர். இதற்கு யார்சாகாம்பு எனும் மற்றொரு பெயருமுண்டு.
மஹேந்திர சிங் இம்மூலிகையை வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவரிடம் சோதனை நடத்திய காவல்துறையினர் 370 கிராம் கொண்ட மூலிகையை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 7 இலட்சமாகும்.
இம்மூலிகை நேபாளம், பூடான், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளில் உள்ள இமயமலை பகுதியில் 3,300 மீட்டரிலிருந்து 4000 மீட்டர் வரை உயரமான பகுதிகளில் கிடைக்கிறது.
இம்மூலிகைக்கு அரிய மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அதிகத் தேவையுள்ள இம்மூலிகையை ஆண் மலட்டுத்தன்மைக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.