

ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக்கில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். இதேபோன்று சோபியான் மாவட்டத்தில் மற்றொரு துப்பாக்கி சூடும் நடந்து வருகிறது.
காஷ்மீரின் அனந்த்நாக்கில் பெத் டையால்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு உளவு பிரிவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், படையினர் மீது தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக நடந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். அந்நபர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை.
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையே மோதல் நடந்து வருகிறது. தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைப்பெறுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.