

மும்பை,
பா.ஜனதா எம்.எல்.சி. பிரசாத் லாட் சமீபத்தில் தேவைப்பட்டால் மும்பையில் உள்ள சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனை தகர்ப்போம் என கூறினார். இவர் தேசியவாத காங்கிரசில் இருந்தவர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு தான் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
இந்தநிலையில் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை வைத்து, பா.ஜனதா சிவசேனாவை குறிவைப்பதாக சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எங்களை குறிவைக்க மராட்டிய பா.ஜனதா கட்சியில் புதிதாக சோந்தவர்களின் உதவியை பெற்று இருப்பது துரதிருஷ்டவசமானது. இதற்கு முன் சிவசேனாவை எதிர்த்தவர்கள் அரசியலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. ஆட்சியில் பங்கு கிடைக்கும் என சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜனதாவில் சேர்ந்தனர். தற்போது பா.ஜனதா ஆட்சியில் இல்லாததால் அவர்கள் பதற்றத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.