

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முகமது பைசல், லட்சத்தீவு மக்களவை எம்.பி.யாக இருந்தார். கொலை முயற்சி வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் கடந்த ஜனவரி 13-ந் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையே, சிறை தண்டனைக்கும், தீர்ப்புக்கும் கேரள ஐகோர்ட்டு ஜனவரி 25-ந் தேதி இடைக்கால தடை விதித்தது. அவ்வாறு இடைக்கால தடை விதித்தும், தகுதிநீக்கம் செய்து மக்களவை செயலகம் வெளியிட்ட உத்தரவை திரும்பப்பெறவில்லை. எனவே, தன்னை தகுதிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஏன் ஐகோர்ட்டில் முறையிடக்கூடாது? தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவது அடிப்படை உரிமை ஆகுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளிவைக்க மனுதாரர் தரப்பில் விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது.