ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளது - மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளது - மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டு 417 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ள அவர், இது கடந்த 2019-ல் 255 ஆகவும், 2020-ல் 244 ஆகவும், 2021-ல் 229 ஆகவும் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018-ல் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 91 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், இது 2019-ல் 80 ஆகவும், 2020-ல் 62 ஆகவும், 2021-ல் 42 ஆகவும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல், 2018-ல் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டதாகவும், இது 2019-ல் 39 ஆகவும், 2020-ல் 37 ஆகவும், 2021-ல் 41 ஆகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மையினரின் நிலை குறித்த மல்லிகார்ஜூன கார்கேவின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள நித்யானந்த ராய், கடந்த 2 மாதங்களில் சிறுபான்மை பண்டிட் சமூகத்தினருக்கு எதிராக 2 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com