

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல் மந்திரிகள் பருக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்கு முன்பு பாதுகாப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வெளியே செல்லவோ உள்ளே வரவோ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து உமர் அப்துல்லா டுவிட்டர் பக்கததில், "காலை வணக்கம். 2022-க்கு வரவேற்கிறோம். புதிய ஆண்டு, இருந்தபோதிலும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை சட்ட விரோதமாக மக்களை அவர்களின் வீடுகளில் அடைத்து வைத்துள்ளது. சாதாரண ஜனநாயக நடவடிக்கைகளால் மிகவும் பயந்துபோன நிர்வாகம். அமைதியை சீர்குலைப்பதற்காக எங்கள் வாயில்களுக்கு வெளியே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன" என்றார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகு தற்போது அங்கு
தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்கும் வகையிலும் தனி தொகுதிகளை வரையறைக்கும் நோக்கிலும் தொகுதி மறு சீரமைப்பு ஆணையம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அதன்படி, ஜம்முவுக்கு கூடுதலாக 6 தொகுதிகளையும் காஷ்மீருக்கு கூடுதலாக ஒரு தொகுதியையும் ஒதுக்கி ஆணையம் பரிந்துரை செய்தது. இதற்கு அங்குள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என குப்கர் கூட்டணி (தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்பட பல அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு) அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழலில் தான் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும், அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக அரசு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.